வானொலி, நாளிதழ், மாத இதழ் , மின்னிதழ்கள், இணையதளம் ஆகிய வற்றில் பிரசுரமான எனது சிறுகதைகள் மற்றும் கவிதைகளை இதில் பதிவிடுகிறேன். படித்து தங்களின் பொன்னான கருத்தினை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் விமர்சனங்கள் எனது எழுத்துப் பணிக்கு மேலும் மெருகூட்டும் என நம்புகிறேன். வணக்கத்துடனும் 🙏நன்றிகளுடனும், உங்கள் இரா. கலைச்செல்வி .
வெள்ளி, 30 மே, 2025
உடல் எடையை குறைப்பது எப்படி?
திங்கள், 19 மே, 2025
மரம்
செவ்வாய், 13 மே, 2025
ரெங்கன் பள்ளி
ரெங்கன் பள்ளி(சிறுவர் கதை)
எழுத்தாளர் : இரா. கலைச்செல்வி
-----
கிராமத்து சிறுவன் தென்னரசு பள்ளிக்கூடத்தின் வாசலில் தயக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறான். அவனது அழுக்கான தைத்த சட்டையும் , கந்தலான புத்தகப் பையும் ,அவனது கறுத்த தேகமும், அவனது ஏழ்மை நிலையை பறைசாற்றின.
மற்ற சிறுவர்கள் சந்தோஷமாக பள்ளிக்கு உள்ளே செல்வதை பார்த்த போது , தென்னரசுவின் கண்களில் ஒரு வித சோகம் குடி கொண்டது.
அவனது குடும்ப சூழ்நிலை அவனை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. ஆடு ,மாடு மேய்த்தும், அவன் வயதிற்கு கிடைக்கும் சிறு வேலைகளை செய்தும், அவன் தனது தாய்க்கு உதவியாக இருந்தான் . அப்பா கூலி வேலை செய்து சம்பாதிப்பதை எல்லாம் குடித்து குடித்து தொலைத்துக் கொண்டிருந்தார்.
அம்மா மீனாவிற்கோ.. தன் மகன் தென்னரசு எப்படியும் படிக்க வேண்டும் என்ற ஆசையில் பள்ளிக்குப் போகச் சொல்வாள் . ஆனால் தென்னரசுக்கோ குடும்ப சூழ்நிலை காரணமாக இருதலைக் கொள்ளியாய் , பள்ளிக்கு செல்ல மனம் இல்லாமலும், பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு செல்ல மனமில்லாமலும், சோகத்துடன் நின்று கொண்டிருந்தான்.
அப்போது அந்த பள்ளியின் ஆசிரியர் ரெங்கன் அந்த வழியாக சென்றார். தென்னரசுவின் சோகமான முகத்தையும், படிப்பின் மீதான அவனது மன ஓட்டத்தினையும் அவர் கவனித்தார்.
தென்னரசுவிடம் மெதுவாக பேச்சு கொடுத்தார். ஏன் தம்பி நீ இன்னும் பள்ளிக்கு போகலையா என்று கனிவுடன் கேட்டார். தென்னரசு தயங்கியபடி இல்லிங்க சார். எங்க வீட்ல ரொம்ப கஷ்டம். நான் மாடு மேய்த்து வந்தால் தான், பால் கறந்து விற்க , அம்மாவுக்கு உதவியாக இருக்கும் என்றான். ஆசிரியர் ரெங்கன் சிறிது நேரம் யோசித்தார். பிறகு தென்னரசுவின் கையைப் பிடித்து உனக்கு படிக்க ஆசை இருக்கா என்று கேட்டார் .
தென்னரசுவின் கண்கள் மின்னின. ஆமா சார் நானும் படிச்சு பெரிய ஆளாகணும் சார் . ஆபீஸ்ல வேலை பார்க்கணும் சார் . ரொம்ப ஆசையா இருக்கு சார் என்றான்.
"சரி நான் உனக்கு ஒரு உதவி செய்கிறேன். நீ தினம் சாயம் காலம் என் வீட்டிற்கு வா . வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது பள்ளிக்கு வா. உனக்கு நான் பாடம் சொல்லித் தருகிறேன் . வாரத்தில் நான்கு நாட்கள் காலையில் நீ உன் வேலையை பாரு, அம்மாவிற்கு உதவி செய் " என்றார் ஆசிரியர்.
தென்னரசுவிற்கு ஒரே ஆச்சர்யம் . அவன் நம்ப முடியாமல் ஆசிரியரை பார்த்தான்.
"நிஜமாவா சார். "
"ஆமாம் தம்பி. கல்வி தான் அனைவருக்கும் உண்மையான சொத்து. அது உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தேடித் தரும். தினமும் மாலை என் வீட்டிற்கு வா" என்று ஆசிரியர் கூறிச் சென்றார் .
அன்றிலிருந்து தென்னரசுவின் வாழ்க்கை மாறியது .காலையில் வேலை .மாலையில் ஆசிரியரிடம் பாடம் கற்றான். ஆசிரியர் ரெங்கனும் மிகுந்த பொறுமையுடனும் ஆர்வத்துடனும் அவனுக்கு பாடம் கற்பித்தார் . அவனும் அதை நன்றாக படித்து புரிந்து கொண்டான் .அவனது படிப்பு திறமையை கண்டு ஆசிரியர் வியந்தார் .
சில வருடங்கள் கழிந்தன. தென்னரசு அந்தப் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான். அவனுக்கு நல்ல கல்லூரியில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஊர் மக்கள் அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
தென்னரசு நன்றாக படித்து , மின்சார வாரியத்தில் , இளநிலை பொறியாளராக அரசு பணியில் சேர்ந்தான் . அவனது தாய் மீனாள் மிகவும் மகிழ்ந்து போனாள். ஆசிரியர் ரெங்கனின் உதவிக்கு எப்படி கைமாறு செய்வது என தெரியாமல் மறுகினாள்.
தென்னரசு தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அந்த ஊருக்கு ஒரு பள்ளிக்கூடத்தை கட்டினான். அதில் இலவசமாக மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். அந்தப் பள்ளியின் திறப்பு விழாவிற்கு ஆசிரியர் ரெங்கனை அழைத்து " ரெங்கன் தொடக்கப்பள்ளி " என பெயரிட்டு ஆசிரியரை கௌரவப்படுத்தினான்.
அப்போது ரெங்கன் ஆசிரியர் தென்னரசுவின் விடாமுயற்சியையும், படிப்பின் மீது இருந்த ஆர்வத்தையும், அவனது எளிமையான குடும்ப சூழ்நிலை பற்றியும், எப்படி படித்து முன்னேறினான் என்பதையும் மிகவும் பெருமையாக அனைவரிடத்தும் கூறினார். அனைத்து மாணவர்களுக்கும் அது ஒரு உத்வேகத்தை கொடுத்தது.
அப்போது தென்னரசு சொன்னான். அந்த நாள் "நீங்க என் கையைப் பிடித்து படிக்க என் வீட்டிற்கு வா" என்று சொன்னீங்ளே சார் . அந்த ஒரு வார்த்தைதான் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது .கல்வி தான் ஒருவனுக்கு வாழ்வில் உயர உண்மையாக கை கொடுக்கும், அந்தக் கல்வியை எனக்கு அளித்த தெய்வம் நீங்கள் ,என்றான் .
ஆசிரியர் ரெங்கன் புன்னகையுடன் அவனின் தோலை தட்டினார். கல்வி ஒரு ஏழைச் சிறுவனின் வாழ்க்கையில் ஒளியேற்றியதை நினைத்து பெருமைப்பட்டார் ரெங்கன் ஆசிரியர். கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் தென்னரசுவினை வியந்து பார்த்தனர். அதைக் கண்ட அம்மா மீனாவிற்கு கண்கள் கடலானது.
முற்றும்.
.
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
படைப்பு :கவிஞர் இரா. கலைச்செல்வி
___
தாயின் கருணை பொழியும் தாய் மண்ணே ..!!
தன்னிகரற்ற உனக்கு அன்பு வணக்கங்கள்...!!
பரந்த கடல்களை முப்புறமும் கொண்டவளே..!!
பசுமை போர்த்திய மலைகளை கொண்டவளே..!!
இயற்கை அன்னையின் எழில் கொண்டவளே ..!!
இனிய பசும் வயல்வெளியை பரிசளித்தவளே.!!
துள்ளி விளையாடும் நதிகளை கொண்டவளே..!!
தூய தென்றல் காற்றின் அமைதி கொண்டவளே..,!!
வடக்கே இமயமும், தெற்கே குமரியும் கொண்டவளே..!!
பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்கள் கொண்டவளே..!!
வேற்றுமையில் ஒற்றுமை காண்பவளே..!!
உன் மடியில் பிறந்தோம், தவழ்ந்தோம் ,உயர்ந்தோம்...!!
பாரதத் தாயே உன் வளத்தால் வளர்ந்தோம்..!!
பாசக்கரம் நீட்டி , நீ சீராட்டி ,பாராட்டி வளர்த்தாய் ..!!
திருவள்ளுவரும், பாரதியும், பாரதிதாசனும்,
அன்னை தெரசாவும் ,பிறந்த புண்ணிய பூமி நீ..!!
புத்தரும், காந்தியும் பிறந்து வாழ்ந்த பூமி நீ!!
புண்ணிய நதிகளின் பிறப்பிடம் நீ..!!
பல்வேறு மக்கள், பல்வேறு இனங்கள் இருந்தும்,
பாரதமாதா நீ மட்டுமே எங்கள் தாய்..!!
இந்தியனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறோம்.
இனிய பாரதத்தினை உலகஅரங்கில் உயர்த்துவோம்.
அன்பும் ,பண்பும், ஒற்றுமையும் நிறைந்து...
அமைதியாய் வாழ்ந்திடுவோம் உன் மடியில்..!!
முற்றும்.
கவிஞர் இரா. கலைச்செல்வி
வாடி என் வயிற்றுக்குள்ளே
சிறுகதை : #வாடி என் வயிற்றுக்குள்ளே..!! # எழுத்தாளர்: இரா.கலைச்செல்வி ***** அன்று வீடே ஒரே பரபரப்பாய் இருந்த...
-
சிகப்பி கிழவி (சின்னஞ் சிறுகதை) (படம் பார்த்து எழுதப்பட்ட கதை) படைப்பு:இரா. கலைச்செல்வி ...
-
எழுதியவர்: இரா. கலைச்செல்வி இனி எனக்கு யாருமே இல்லையா... ? 16 வயது சுந்தரி என்ற நான், இவ்வுலகில் இனி தனித்து விடப்பட்டு விடுவேனா.....