சிறுகதை:
காதலின் மறுபக்கம்
ஆக்கம் : இரா. கலைச்செல்வி
__________
(அந்த ஊர் பெரிய நகரமும் இல்லை .கிராமமும் இல்லை. இடைப்பட்ட ஒரு சிறு நகரம். செல்போன் வருவதற்கு முந்தைய காலம். ஆங்காங்கே எஸ் .டி .டி. பூத்துகள் மட்டும். )
அன்று அந்த ஊரின் நேரு தெரு முழுவதும், ஒரே பதட்டமாய் இருந்தது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா. எப்படியாவது உயிர் பிழைக்கனும் அந்த பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு. குனிந்த தலை நிமிராம காலேஜுக்கு போய் வரும். ஏன் இப்படி பண்ணுச்சுனே தெரியல. ?
பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்னு சொல்லிக்கிறாங்களே . இல்ல ... சரசு அக்கா உசுரு இருந்துச்சு . நான் பார்த்தேன். மகமாயி எப்படியாவது காப்பாத்தி கொடுத்திடனும்.
இந்து ...பிரியாவுக்கு போன் செய்தாள். பிரியா இன்னைக்கு காலேஜ்க்கு போகவேண்டாம். நீ அப்படியே பு,றப்பட்டு ஜி.ஹெச்..க்கு வந்துடு... விஷயம் தெரியுமா. ?
என்ன விஷயம் இந்து? எனக்கு ஒன்னும் தெரியாதே. !
ரொம்ப சோகமான விஷயம் நடந்துருச்சு பிரியா. நம்ம திலகா... நம்மள விட்டு போயிருவாளோன்னு தோணுது .
ஏய் ... என்னடி சொல்ற ..எனக்கு ஒன்னும் புரியல.
ஆமா பிரியா . திலகா சூசைடு அட்டென்ட் பண்ணிட்டா. கடைசி நேரத்தில் அவ அண்ணி பார்த்துட்டு ,காப்பாத்தி இருக்காங்க. உயிர் லேசா இருக்குன்னு சொல்றாங்க. ஜி.ஹெச் க்கு கொண்டு போய் இருக்காங்க .உடனே வா.. நம்ம ஜி.ஹெச்க்கு போகணும்.
"அய்யய்யோ... ஏண்டி... இவ இப்படி பண்ணினா ..அடிப்பாவி."
"சரி . நீ கிளம்பி வந்து ஜி.ஹெச் வாசலில் நில்லு. நானும் வந்துடறேன் . அங்கே பேசிக்கலாம்."
இந்துவும் பிரியாவும் சந்தித்து , திலகாவை பார்க்க சென்றனர்.
ஏதேதோ வாயிலும், மூக்கிலும் பொருத்தப்பட்டு ,குழாய்களும் பாட்டில்களுமாய் , அசைவின்றி திலகா கிடந்தாள். அவளின் அண்ணி பக்கத்தில்.
இந்துவும் பிரியாவும் அறைக்கு வெளியே நிற்பதை கவனித்து, திலகாவின் அண்ணி, வெளியே வந்தாள்..
என்ன அண்ணி... எப்படி நடந்துச்சு.? எங்களால் ஜீரணிக்கவே முடியல . டாக்டர் என்ன சொல்றாங்க..?
கலங்கிய கண்களோடு, திலகாவின் அண்ணி , நடந்தவைகளை விவரித்தாள். குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருந்தேன். திடீர்னு ஒரு சத்தம் திலகா ரூம்ல இருந்து. அதோட அவளோட வித்தியாசமான குரலும் கேட்டது . எனக்கு பதறிருச்சு . அப்படியே குழந்தையை தூக்கிட்டு, திலகா ரூமிற்குள் போனேன் .ஒரு கணம் என்ன செய்வது என்றே தெரியவில்லை .அவள் தூக்கில் தொங்கிட்டு இருந்தா . கால் உதறி கொண்டு இருந்தது .அப்படியே குழந்தையை கீழே போட்டுட்டு, அவளை தாங்கி பிடிச்சேன் .வீட்ல யாருமே இல்ல. ரொம்ப நேரமா கத்தி... கத்தி... யாரும் வரவே இல்லை. என்ன செய்றதுன்னே தெரியல. விட்டா அவளோட உயிர் போய்விடும். 10 நிமிஷம் பிடித்துக் கொண்டு நின்றேன். என்னால நிற்க முடியல. என்னோட பலம் கொண்ட மட்டும் கத்தினேன் . அவ அண்ணனும் வீட்டில இல்ல. ரோட்டுல போனவங்க என்னோட சத்தத்தை கேட்டு ,வீட்டுக்குள்ள வந்தாங்க . அப்புறம் என்னோட அலறல் சத்தத்தை கேட்டு ரூம் குள்ளே வந்து பார்த்து , வந்தவர் தான் ...பெரிய ஸ்டூல் எடுத்து போட்டு, அந்த கயிற்றை அறுத்து ,அவளை கீழே கிடக்கினார்.
உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி ,ஆம்புலன்ஸ் வந்து, கால் மணி நேரத்துல இங்க ஜி.ஹெச்க்கு வந்துட்டோம். அவ அண்ணனுக்கும் செய்தி போய் அவரும் வந்துட்டாரு. டாக்டர் பிழைக்கிறது கஷ்டம்னு சொல்றாங்க. குரல்வளை நல்லா நசுங்கிருச்சாம்.. இருந்தாலும் உயிர் இருக்கு .நாங்க முயற்சி பண்றோம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.
உங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல அண்ணி. கடவுள் தான் காப்பாத்தணும். எப்படியும் பிழைச்சுடுவா . கவலைப்படாதீங்க அண்ணி. அவளோட நல்ல மனசுக்கு எதுவும் நடக்காது. நாங்க நாளைக்கு வர்றோம்.
சரி இந்து . திலகா என்னிடம் நாத்தனார் மாதிரியே பழக மாட்டா. சொந்த தங்கச்சி மாதிரி தான் பழகுவா. எப்படியும் பிழைத்து வந்துடனும். கண் கலங்கினார் அண்ணி.
இருவரும் மௌனமாய் விடை பெற்று ,வீடு வந்து சேர்ந்தனர். இருவர் மனதிற்குள்ளும் ஆயிரம் நினைவுகள்.
எல்லாமே அவ அண்ணனால் தான் . அவன் ஒரு முரடன். திலகா ...அவன் பிரண்டு சுந்தரை காதலிக்கிறாள்ன்னு தெரிஞ்ச உடனே, வீட்ல தினம் ரகளை தானாம். நிம்மதியே இல்லைன்னு சொல்லி... திலகா அப்படி கண் கலங்கினாள். இது பிரியாவின் மனசு.
ஏன் இவ இப்படி பண்ணுனா.? பெரிய காதல். மண்ணாங்கட்டி காதல். காதலிச்சு கல்யாணம் பண்ணவங்கெல்லாம் இப்ப எப்படி வாழ்றாங்கன்னு இவளுக்கு தெரியாதா என்ன? கல்யாணம் வரைக்கும் தான் காதல். கல்யாணம் முடிந்த பிறகு நான் ஆம்பளைன்னு காட்ட ஆரம்பிச்சுடுவாங்க. குடும்பம் ,குழந்தை, ஈகோ அப்படின்னு பிரச்சனை மேல் பிரச்சனை தான் . காதல் என்பது கானல் நீர் மாதிரி. இதுக்கு எதுக்கு பைத்தியக்காரத்தனமா இவ உயிரை போக்கிக்கணும். பிழைத்து வரட்டும். அப்புறம் பேசுகிறேன். இது இந்துவின் மனசு.
அன்று திலகா சொன்னது பிரியாவின் நினைவில் இன்று.
என்னவோ பிரியா... அவன் பாக்குற அந்த பார்வை என்னைய என்னவோ பண்ணுது. இதுவரை அவன் கிட்ட நான் எதுவும் பேசியதே கிடையாது. அவன் வீட்டுக்கு வந்தா.. எங்க அண்ணன் என்னைப் பார்த்து ஒரு முறை முறைப்பான். நான் ரூம்குள்ள போயிடுவேன். எப்பவாவது ஏதேச்சையாக அவனைப் பார்க்க நேர்ந்தால் அவன் ஒரு சிரிப்பு சிரிப்பான். நாள் பூராம் அந்த சிரிப்பையே நெனச்சுக்கிட்டு இருப்பேன். இதுவரை சௌக்கியமா ?... வரேன் ... கொஞ்சம் தண்ணி கொடுங்க ...என மூன்று வார்த்தை தான் பேசி இருக்கான். கண்ணால பல விஷயங்கள் பேசி இருக்கான். இது ஒரு தனி பீலிங்கா இருக்கு ப்ரியா.
இவளோட அண்ணன் , சுந்தரோடு இவளை சாதாரணமா பேச அனுமதிச்சிருந்தா கூட காதல் வந்திருக்காது. அவள் இந்த அளவிற்கு போய் இருக்க மாட்டாள். எப்பவுமே முறைச்சு முறைச்சு அவளை கண்ட்ரோல் பண்ணி தான், இவள் மனசு இப்படி ஆயிடுச்சு.. பிரியா பெருமூச்சு விட்டாள்.
அவளோட அண்ணன் அந்த பக்கம் இந்த பக்கம் போகும்போது , கண்ணால பார்த்து பேசியது தான். அப்பாவும் இல்ல. அம்மாவும் இல்ல. அண்ணன் மட்டும் தான் . அவனும் அன்பா பேசுவது கிடையாது . அந்த பாசத்துக்கான தவிப்பு சுந்தர் பார்வை பட்டதும் உருகி விட்டது. மனசுக்குள்ளே வச்சு வச்சு ,அழுத்தி அழுத்தி, அழுது செத்து இருக்கா. திலகா பக்கம் உள்ள நியாயத்தை பிரியா உணர்ந்திருந்தாள்.
ஒரு நாள் எப்படியோ அவனோடு பேச சந்தர்ப்பம் கிடைக்கும் போது, ஐ லவ் யூ என சுந்தர் சொல்லி விட்டானாம். இவளும் சிரித்துக் கொண்டே பதில் ஏதும் சொல்லாமல் உள்ளே வந்து விட்டாளாம்.
இந்த விஷயம் அவள் அண்ணாவுக்கு தெரிந்ததோ, இல்லையோ அன்றிலிருந்து இவள் காலேஜ் போவதை நிறுத்தி விட்டான் . சுந்தர் தனது வீட்டுக்கு வருவதையும் நிறுத்தி விட்டான் .வீடு ஜெயில் மாதிரி ஆகிவிட்டது என திலகா புலம்பியது , நேற்று பேசியது போல உள்ளது.
காலேஜுக்கும் போக முடியல . அவனையும் பார்க்க முடியல. ரூம்குள்ளேயே இருந்து இருந்து அவளுக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆயிடுச்சாம். . நான் அப்பப்போ போய் அவளிடம் பேசிட்டு வருவேன் .என்ன செய்வது என்றே புரியவில்லை என சொல்லி அழுதா திலகா.
இரண்டு நாள் கழித்து ஜி .ஹெச் க்கு சென்ற போது, அவள் அண்ணி முகத்தில் சற்று மகிழ்ச்சி .என்ன அண்ணி டாக்டர் என்ன சொன்னாங்க.? உயிர் பிழைக்க 75% சான்ஸ் இருக்குன்னு சொல்றாங்க. இருவருக்கும் மனதிற்குள் சந்தோஷம்.
ஒரு வாரத்திற்கு பிறகு திலகா உயிர் பிழைத்து விட்டதாக தகவல்... இன்னும் ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டிற்கு செல்லலாம் என கூறி விட்டார்களாம்.
இரண்டு தடவை இந்துவும் ,பிரியாவும் போய் திலகாவை பார்த்துவிட்டு திரும்பினர். அவளால் எதுவும் பேச முடியவில்லை. தொண்டைக் குழாய் நசுங்கி விட்டதால். தோழிகள் கண்களால் மட்டுமே பேசிக்கொண்டனர். அவள் காதலைப் போலவே.
அடுத்த வாரம் டிஸ்சார்ஜ் ஆகி திலகா வீட்டிற்கு வந்தாயிற்று . அவள் அண்ணன் அவளைப் பார்த்து முறைத்ததோடு சரி. அண்ணி தான் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தாள். ஒரு மாதத்தில் பழைய திலகாவாய் மாறிவிட்டாள்.
இன்று திலகாவும், இந்துவும் தனியாய் பேசிக் கொள்கின்ற வாய்ப்பு .
"திலகா... நான் உனக்கு எவ்வளவு சொல்லி இருக்கேன் . அப்படி இருந்தும் நீ இப்படி பண்ணிட்டியே. எல்லாருக்கும் எவ்வளவு வேதனை..!!. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னா தற்கொலை தான் தீர்வா.? எத்தனை பேர்… காதலிச்சு கல்யாணம் செய்து கொண்டவர்கள் கொஞ்ச நாள்ல பிரிஞ்சு போறாங்க உலகத்துல . நீ பார்த்துகிட்டு தானே இருக்க. லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்க எல்லாம் சந்தோஷமா இருக்காங்களா? சில பேர் தான் கடைசிவரை காதலோடு வாழ்கிறார்கள்"
"தெரியும் இந்து. ஆனால் முடியல . அந்த வலியை என் மனசால தாங்க முடியல."
கல்யாணம் வரைக்கும் தான் காதல் . கல்யாணம் ஆச்சு அவ்வளவுதான். இது சினிமா இல்லை. குடும்பம், குழந்தை, கடமை அப்படி.. போய்க்கிட்டே இருக்கும். அதுக்கு நடுவுல எத்தனையோ சண்டை , நீ பேசுற விதம் அவனுக்கு பிடிக்காது . அவன் பேசுற விதம் உனக்கு பிடிக்காது . இன்னும் எத்தனையோ . பெரும்பாலும் அடிமாட்டு வாழ்க்கை தான். போரடிக்க ஆரம்பிச்சிரும். இப்போ அவன் சிரிப்பை பாத்து உனக்கு வருகிற ஃபீலிங் அப்புறம் வராது . நீயா ஏதாவது கற்பனை பண்ணி, இப்ப அதுல சந்தோஷப்பட்டு இருப்பாய்.. அதுதான் உண்மை. உங்க அண்ணன் அண்ணி எப்படி இருக்காங்க .அது மாதிரி தான் இருக்கும் வாழ்க்கை. கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். அவ்வளவுதான்."
"இதுக்காக போய்... இருபது வருடமா வளர்த்த இந்த உடலை, உன் உயிரை மாய்த்துக்கொள்ள போயிட்டியே. உன்னை இவ்வளவு தூரம் வளர்க்க , உங்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க. பிளஸ் டூ..வில் 90% மார்க் வாங்க நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாய். எல்லா உழைப்பையும் மறந்துட்டு இப்படி உலகை விட்டுப் போய் சேர முடிவெடுத்து விட்டாயே.இதையெல்லாம் பார்க்க கூடாதுன்னு தான் உங்க அம்மா முன்னாடியே போய் சேர்ந்துட்டாஙக."
"நீ சொல்ற எல்லாமே என் மனசுல வந்து போச்சு இந்து.. ஆனா இங்க வீடே நரகமாய் இருக்கே. தினம் தினம் சாவதற்கு ஒரேடியா சாகலாம்னு தான். "
"சரி திலகா.இப்ப ஒன்னும் இல்ல. நான் உங்க அண்ணாவிடம் பேசி உன்னைய காலேஜுக்கு அனுப்ப சொல்றேன். கொஞ்ச நாள் அமைதியா இரு . உங்க அண்ணன் மனசும் மாறலாம் . இல்லாட்டினாலும் ஒன்னும் குடி முழுகாது.. அவனை பிரண்டாய் நினனச்சு மனசை தேத்திக்கோ. தப்பு இல்ல. அவன் தான் வாழ்க்கை என்று நீ முடிவு செய்து விடாதே. . அதெல்லாம் சும்மா பைத்தியக்காரத்தனம். இப்ப பிடிச்சிருக்கும். ஆனா இந்த காதல் பிடிப்பு ...கடைசி வரை இருக்கும் என்கிறது உண்மை இல்லை."
"என் அக்காவும் லவ் மேரேஜ் தான். எங்க அப்பா தொல்லை விட்டது என கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு .எங்க அக்கா அடிக்கடி சொல்லுவா .காதல் பண்ணும் போது பார்த்த பார்வைக்கும், கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பார்த்த பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்று...கல்யாணத்துக்கு அப்புறம் அந்த பார்வையிலே காதலே பார்க்க முடியவில்லை, என்று அடிக்கடி சொல்லுவா. இப்படித்தான் பல பேரோட வாழ்க்கை."
உன் படிப்புல இப்போதைக்கு நீ கவனம் செலுத்து .காலம் எல்லாத்துக்கும் ஒரு தீர்வு கொடுக்கும். நாளைக்கு நான் உங்க அண்ணன் கூட பேசுறேன். சரியா திலகா.?
இந்து திலகாவின் அண்ணனிடம் பேசி, திலகாவை காலேஜுக்கு அனுப்ப சம்மதம் வாங்கினாள் . திலகாவிற்கு தான் முழு பொறுப்பு எடுப்பதாக சொல்லி, காலேஜுக்கு அனுப்ப கேட்டுக் கொண்டதின் பேரில், திலகாவின் அண்ணனும் வேறிவழியின்றி ஒப்புக்கொண்டான்.
திலகா படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினாள். கல்லூரிக்கு சென்று, தோழிகளுடன் பேசியதில், அவள் கவலை மறந்து, சகஜ நிலைக்கு திருப்பினாள்.
இந்நிலையில் சுந்தருக்கு வங்கியில் நல்ல வேலை கிடைத்து விட்டது. அண்ணனும் சற்று மனம்மாறத் தொடங்கி இருந்தான் . சுந்தரின் அம்மா முறையாக, திலகாவின் அண்ணனிடம் வந்து பெண் கேட்டார். கல்லூரி படிப்பு முடித்ததும் திருமணம் செய்வதாக திலகாவின் அண்ணன் ஒப்புக்கொண்ட நிலையில், திலகாவின் மனசு லேசானது. முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தினாள். பட்டம் பெற்றதும் திருமணம் என முடிவாயிற்று.
கல்லூரி முடித்து ,அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்று முடிந்தது. ஆறு மாதம் கழித்து இந்து ... திலகாவை சந்தித்தாள். என்ன திலகா... லைப் எப்படி போயிட்டு இருக்கு.?
போய்கிட்டு இருக்கு இந்து. .நீ சொன்ன மாதிரி தான். பெருசா ஒன்னும் இல்ல.
இந்த வாழ்க்கைக்கு தானா நான் என் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தேன் என நினைத்து, இப்போது உண்மையில் வெட்கப்படுகிறேன் இந்து.
முற்றும்
✒️ஆக்கம் : @இரா. கலைச்செல்வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக