சனி, 14 டிசம்பர், 2024

சுருட்டு தாத்தா


சிறுகதை.    #சுருட்டு தாத்தா #    


எழுத்தாளர் : 

இரா. கலைச்செல்வி


                                         *****


           அது ஒரு மிகச் சிறிய பெட்டிக் கடை .சினிமா தியேட்டருக்கு நேர் எதிரில் இருந்தது.  சினிமா துவங்கும் முன் சிகரெட், பிடி, முறுக்கு ,கடலை உருண்டை என  நல்ல வியாபாரம் . சினிமா ஆரம்பிக்கும் நேரம் தவிர , மற்ற நேரங்களில் வியாபாரம் சுமார்தான். 20 வருடங்களாக அந்த கடையின்  முதலாளி சுருட்டு தாத்தா.  ஆம் அவரை அனைவரும் அப்படித்தான் அழைப்பர். 


ஒல்லியான கருத்த தேகம். நரைத்த வெள்ளை முடி.  தலையில் ஒரு துண்டு. வெயில் காலம் என்றால் சட்டை போட்டிருக்க மாட்டார். வேஷ்டி மட்டும் தான். சிரித்த முகம் சிலரிடம். கண்டிப்பான முகம்  சிலரிடம். . ஓய்வு  நேரங்களில் சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பார்.  பெட்டிக்கடை என்றாலும், ஓரளவு சகலவித பொருட்களும் அங்கு கிடைக்கும்.


"தாத்தா ... தாத்தா  ஐம்பது காசுக்கு கடலை மிட்டாய்."


 "இந்தா பேராண்டி எடுத்துக்கோ. " அன்போடு  கன்னத்தில் ஒரு தட்டு தட்டி அனுப்புவார். இது சுருட்டு தாத்தாவின் கரிசனம்.


"என்ன தாத்தா  . எப்படி இருக்கீங்க? .ஒரு சொக்கலால் பிடி கட்டு."


ம்..ம். நல்லா இருக்கேன் தம்பி.. நீ எப்படி இருக்கப்பா.? வயல்ல விவசாயம்  எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? நல்ல மழை தானே. இந்த வருஷம் நல்ல விளைச்சலா.. ?ரொம்ப நாளா இந்த பக்கம் ஆளே காணோம். அப்பப்போ வந்து ,இந்த தாத்தாவை பார்த்திட்டு போ தம்பி.  உரிமையோடு கூறுவார். 


சரிங்க அய்யா.  வேலை இல்லையினா,  இந்த பக்கம்  தான் வருவேன் அய்யா. உங்களோட வந்து பேசினாலே நாட்டு நடப்பு எல்லாம் அத்துபடியா தெரிஞ்சுக்கலாம். . வரேன் அய்யா."


"போய் வா தம்பி."



"தாத்தா ... தாத்தா...  எங்க அம்மா... கம்பெனியிலிருந்து  வர லேட் ஆகும் . நாளைக்கு ...நான் ஸ்கூல் ஹோம் வொர்க் பண்ண வேண்டும். ஒரு என்பது பக்க,  கோடு போட்ட நோட்டு கொடுங்க தாத்தா. அம்மா வந்தப்புறம் காசு கொண்டு வந்து கொடுத்துடறேன்."


"அதுக்கு என்ன பேராண்டி... எடுத்துட்டு போ .உனக்கு இல்லாததா.!!"


மகிழ்வோடு எடுத்துக் கொடுத்தார் சுருட்டு தாத்தா. 



"அய்யா இரண்டு   "கோல்டு பிளேக் " சிகரெட் பாக்கெட்."


தாத்தா கவனிக்காதது போல் வேறு வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். மறுபடியும் கேட்டான் அய்யா ரெண்டு கோல்ட் பிளேக் சிகரெட். முகத்தைத் தூக்கிப் பார்த்து, ஒரு முறை முறைத்து  விட்டு, கீழே குனிந்து கொண்டார்.


சிறிது நேரம் கழித்து ... "பழைய பாக்கி என்ன ஆச்சு ." இது தாத்தாவின் கேள்வி. 

அசடு வழிந்தவன்... "அடுத்த வாரம் தந்துடறேன்" 


"இதே பதிலைத் தான் வாரம் வாரம் சொல்ற. சரி அப்போ அடுத்த வாரம் வந்து சிகரெட் வாங்கிக்கோ.  இப்போ நடையை  கட்டு... என்று கூறி தன் வேலையை பார்க்க துவங்கி விட்டார். அவன் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு  கிளம்பினான்.


"வந்துட்டான் சிகரெட் வாங்க. காசு கொடுத்து  வாங்க  துப்பு இல்ல. எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கான். 30 வயசு ஆகுது .ஒரு வேலைக்கும் போகல. ஊரை  சுத்திகிட்டு சிகரெட்   குடிக்க மட்டும் வந்துருவான். இவனுக்கு கோல்ட் பிளேக் கேக்குது. சொக்கலால் பீடிக்கே  காசு இல்ல. கேட்கிறது கடன். வாய் கூசாம பொய் வேற.." தனக்குள் , ஆனால் அவனுக்கு கேட்கும் படி ,முணுமுணுத்துக் கொண்டார். 


சிறிது நேரம் கழித்து,  ஒரு சிறுவன் ஓடி வந்தான் . தாத்தா தாத்தா எனக்கு ரொம்ப தாகமா இருக்கு தாத்தா. மண்பானை தண்ணி இருந்தா குடுங்க  தாத்தா.


தாத்தா அவனைப் பார்த்து விட்டு ,  தண்ணி தாகமா  இல்ல  பசியா..? சும்மா சொல்லு.


அவன் ஏதும் சொல்லவில்லை. மௌனமாய் நின்றான். 


தாத்தா நிலைமை  புரிந்து , ஒரு மாம்பழ  ஜூஸ் பாட்டிலும்  ,ஒரு கடலை மிட்டாய் பாக்கெட்டையும் எடுத்து கொடுத்தார்.


அச்சிறுவன் வேண்டாம் தாத்தா... வேண்டாம். எனக்கு தண்ணி மட்டும் போதும். 


பரவாயில்ல பேராண்டி .சாப்பிடு நல்லா சாப்பிடு.  சிரித்துக் கொண்டே அவனின் தலையை அன்போடு தடவி விட்டார். 


இட்டார் பெரியோர் . சிலருக்கு ,சில நேரங்களில்  , இடாதோரும் பெரியோரே.


முற்றும்.


எழுத்தாளர் இரா.கலைச்செல்வி


 




கல்லுப் பிள்ளையார்

🙏🏻 *கல்லுப் பிள்ளையார்*🙏🏻


கவிதை: 



கவிஞர் இரா. கலைச்செல்வி


போராளி சுப்புவின்..

 திடீர் மரண செய்தி...!!!


 காட்டுத்தீயாய்...!!!

 கந்துப்பட்டி முழுவதும்

காற்றாக  பரவியது.


அனுதாப அலைகள் எங்கும்...!!!

 ஆயிரக்கணக்கில் இரங்கல் செய்திகள்...


சுப்புவின் இளம்  மனைவிக்கு ஆறுதல்.

 சுப்புவின் குடும்பத்தை,


 தத்தெடுத்துக் கொள்வதாக ...!!!

 தலைவரின் அறிவிப்பு.


சுப்புவின் சடலத்திற்கு ...

கட்சி தலைமையிடத்திலிருந்து...


ஆயிரம் மாலைகள்.

 அரசு மரியாதையுடன்

 அடக்கம் செய்யப்பட்டது சடலம்.


தத்தெடுத்த சுப்புவின் குடும்பத்திற்கு,

 தலைவர்களின் அணிவகுப்பு .


குடும்ப நலம் விசாரிக்க..!!!

குடும்பத்தின் தேவையினை அறிய...!!!


பிரம்மாண்டமாய்...!!!

 பத்திரிகைகளில் 

பாராட்டுக்கள்...இச்செய்தி குறித்து.


ஒரு மாதத்திற்குப் பின்

 ஒரு கோரிக்கை வைத்து 


உதவி கேட்டாள்  சுப்புவின் மனைவி .

உடனே நாளை வா...!! 


நல்லது சொல்கிறேன் என,

நவின்றார்...!!!

 அந்த  கட்சியின் எம்எல்ஏ.


மறுநாள் சென்றாள்.

 மாறுபட்டு பேசினார்.

 

இருப்புக் கொள்ளவில்லை.

 இவளுக்கு...!!!


தனது கோரிக்கை குறித்து  ,

 தாளாமல் அவசரப்பட்டாள்.


ஏன் அவசரப் படுற...

 கொஞ்சம் இரு ....!!


"எட்டி கையைப் பிடித்தான்.

ஒரு நமட்டு சிரிப்புடன்."



*சாக்கடைக்குள் மூழ்கிய பன்றி.!!!*

 சட்டென்று நினைவில் வந்தது.


சுட்டாள் கண்களால். 

சூடு தாங்காமல்....


 மறுவாரம் மாலை..!!

மகிழ்வோடு  வரச்சொன்னான்.


கனத்த மனத்தோடு நடந்தாள்.

 கணவரின் மரணமும்,

 கணவரின் சடலத்துக்கு

 கிடைத்த ...


மாலை மரியாதைகளும்,

 மனக்கண்முன் வந்து...

 மனசு  கனத்தது..!!


ஆறாத மனதுடன்....

ஆற்றங் கரையில் ,

அமர்ந்திருக்கும்....


கல்லுப் பிள்ளையாரை நோக்கி ....

கால்கள் நடந்தன..!!


கல்லுப் பிள்ளையாரிடம் 

கவலைகளை கொட்டி ...

தன்மனதை ஆற்றுப்படுத்திவிட்டு,


தன்னம்பிக்கையுடன் ,

தைரியமாய் நடந்தாள் ..!!

தன்னை மட்டுமே நம்பி, 

எதையும் எதிர்கொள்ள..!!


கவிஞர் இரா. கலைச்செல்வி

செவ்வாய், 10 டிசம்பர், 2024

இரத்தக்களரி



 சிறுகதை::    #இரத்தக்களறி#.   


படைப்பு : இரா.கலைச்செல்வி


                                    *****


               "அம்மாடி... எனக்கு நெஞ்செல்லாம்  பதறுது. இப்படியா....  செய்வானுங்க. எனக்கு ஐந்தடி  தூரத்தில.... நட்ட நடு ரோட்டுல ....கார்ல உட்கார்ந்து இருந்தவரை புடிச்சு இழுத்து.... .அப்பப்பா....ரோடு  பூராவும் ....ஒரே இரத்தக்களறியா இருக்கு."

"வந்தவனுங்க..... வந்த வேகத்துல  காரில் சிட்டா  பறந்துட்டானுங்க. ஐயோ.... சினிமாவுல நடக்குற மாதிரியே இருக்கே."

புலம்பியபடியே  பக்கத்தில் உள்ள தெருவுக்கு போய் ஒரு வீட்டின் வாசற்படியில் அமர்ந்தாள் ரேணுகா.

"அம்மா  .....கொஞ்சம் தண்ணி குடுமா... ஒரே....மயக்கமா வருது. இப்படியா பண்ணுவாங்க.  படுபாவி பயலுக" .

"என்னம்மா... என்ன ஆச்சு...? "

"ஏன்... கேக்குறீங்க ....போங்க...".  கொஞ்சம் பத்தடி தள்ளி...  ரோட்ல போய் பாருங்க ....அந்த ரத்தக்களரிய.

அப்போதுதான் அந்த தெருவிற்கே‌ தெரிந்தது . ரோட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று.

செய்தி காட்டுத்தீயாய்  பரவியது.  தெருவெல்லாம் ஒரே பரபரப்பு.    .   இப்படியும்  நடக்குமா...?? பட்ட  பகல்ல.... நடு ரோட்டுல...ரோடு எல்லாம்  ஒரே இரத்தம். பார்க்க முடியல . 

"என்ன ஆச்சு... என்ன ஆச்சு... " பலரும்.

நம்ம பஞ்சாயத்து தலைவரைத் தான்... வெட்டி போட்டுட்டு ஓடிட்டானுங்க.

"அடக்கடவுளே... இவரையுமா...??? "

 "அந்த பழைய  தலைவர் அம்மாவா... பொம்பளையுனும்  கூட பாக்காம... பஞ்சாயத்து ஆபீஸ்லயே... வச்சு வெட்டுனானுங்க. இரண்டாவது தலைவரை... அவர் வீட்டிலேயே வச்சு வெட்டுனானுங்க.  இப்போ மூணாவதா இவரையும்.... இப்படி  நட்ட நடு ரோட்டில கொலை பண்ணிட்டாங்களா...!!!"

"என்னதான் நடக்குது இந்த ஊர்ல...??"

"எல்லாம் ரியல் எஸ்டேட் தகராறு தான். பஞ்சாயத்து தலைவர் ஆனவுடன்... அதிகாரம் இருக்குதுன்னு ஊர்ல உள்ள ...பொறம்போக்கு  நிலத்த எல்லாம் பட்டா போட்டு ... இஷ்டத்துக்கு ‌விக்கிறாங்க. காசு... கொள்ளை காசு வருது. அதுல வர்ற பங்கு தகராறு தான்... வேற என்ன...??"

"நம்ம ஊருக்கு .. ரோடு போட  கவர்மெண்ட் கொடுக்கிற  பணத்தையும்  ...பொய் கணக்கு எழுதி .. அங்கே ரோடு போட்டேன் ...இங்கே ரோடு போட்டேன்....ன்னு  சொல்லி வாயில போட்டுக்கிறாங்க. "

"தெரிஞ்சவன் சும்மா இருப்பானா....???  எனக்கும்  பங்கு வேணும்னு  கேட்பான்..!!! குடுக்கலைன்னா வெட்டு."

இவங்களுக்கு கொஞ்சம் கூட ....உயிர பத்தி கவலையே இல்லையே.

 முன்னாடி ரெண்டு தலைவரையும் தான் வெட்டுனாங்களே...!!!. இப்பவாவது கவனமா இருக்கணும்னு நினைச்சாங்களா ..!!!. காச வச்சு என்னத்த பண்ண போறாங்க...??? இப்போ உயிரே போச்சே...!!!... இப்படி சிலர்.

 இனிமே இந்த ஊருல பஞ்சாயத்து தலைவரா யாரும் நிக்கவே மாட்டாங்க..!!! அடுத்தடுத்து மூன்று  உயிர் போயிடுச்சே. இது பலரின் அங்கலாய்ப்பு.

இந்த ஊரை நினைச்சாலே பயமா இருக்கு... ஏன் இவனுங்க இப்படி இருக்காங்க ...??.கொலை செய்ற அளவுக்கு..!!!  ஒன்னும் புரியல .ஒரு கொலையா...? ரெண்டு கொலையா .... ? மூனு கொலை...!!! மூனு   பஞ்சாயத்து தலைவர்களையும் வெட்டி சாய்ச்சுட்டாங்களே.. ..!!!  புலம்பித் தீர்த்தாள்  ரேணுகா.

மூன்று பஞ்சாயத்து தலைவர்களும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு விட்டநிலையில் இனியாவது... யாராவது  நேர்மையான , உண்மையில்  சேவை செய்யும் மனப்பான்மையோடு பஞ்சாயத்து தலைவராக வருவார்களா என்ற ஏக்கம்... அந்த ஊர் மக்களுக்கு.

கட்சிக்கு எவன் காசு கொடுக்கிறானோ அவனுக்கு சீட்டு. ஓட்டு  யாருக்கு போடுறதுன்னே... தெரியல. மூஞ்சியிலயே  ரவுடி..ன்னூ எழுதி ஒட்டி இருக்கு . ஓட்டு போடணும் தான். அது ஜனநாயக கடமை ஆச்சே. ஆனால் நேர்மையான மனிதர்கள் தேர்தலில்  நிற்பதில்லையே. இந்த ஊரோட கதி  இப்படி... ஆயிடுச்சே..பலரின் ஆதங்கம் இதுதான். 

 வீட்டு வரி,தண்ணீர் வரி அவ்வளவு கட்றோம்.   15 வருஷத்துக்கு முன்னாடி போட்ட ரோடு. குண்டும் குழியுமா இருக்கு. நடக்கவே முடியல..!!! . ரோடு போட சொல்லி எத்தனை தடவை  தான் மனு கொடுக்கிறது. ஒரு பிரயோஜனமும் இல்ல...!!!  மனசாட்சின்னு ஒன்னு அவங்களுக்கு இருக்குமான்னு தெரியல...??.  புவனா புலம்பி தீர்த்தாள்.

எலக்க்ஷன் வருதுன்னா மட்டும்... எவ்வளவு ரூபாயை வேஸ்டா செலவழிக்கிறாங்க..!!! மேள தாளம் ...நோட்டீஸ்... விளம்பரம்...  மேடைப் பிரச்சாரம். இப்படி எவ்வளவு பணத்தை வாரி இறைக்கிறாங்க...??? அந்தப் பணத்தை  ஊர் நலத்திற்கு பயன்படுத்தினா , திரும்ப திரும்ப அந்த தலைவருக்கு தானே ஓட்டு போடுவாங்க...?? இது தெரியாதா..???? 

பக்கத்து ஊரு பஞ்சாயத்து தலைவர் எப்படி அந்த ஊருக்கு நல்லது செய்கிறார்...? .   ஊர் முழுவதும்  நல்லா ரோடு  போட்டிருக்கார்.  குழந்தைகள் விளையாடப் பூங்கா. குடி தண்ணீர் வசதி. மூன்று தடவையும் அவரே தான் ஜெயித்து வர்றார். நம்ம ஊருக்கு அப்படி ஒரு நல்ல காலம் விரைவில் வராதா..?. இப்படி ரேணுகாவின் மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. 

ஒரு வருடம் ஓடி விட்டது.. அடுத்த பஞ்சாயத்து தேர்தல் வரப்போகிறது .இந்த தேர்தலில் கொலை செய்யப்பட்ட தலைவரின் மனைவி கமலா போட்டியிட போவதாக தகவல்.

அனைவருக்கும் ஆச்சரியம் . இத்தனை கொலை நடந்த பிறகும்மா...!!! கணவர் இறந்தும் கூடவா...!!! ஊரைவித்து உலையில போட்டவங்க .இருக்கிற காசு பத்தாதா...???  ஊர் மக்கள் மனசுக்குள் புகைந்தனர்.

கட்சி பெயரை சொல்லியே ஓட்டு கேட்டு ஜெயிச்சிடுறாங்க.  கட்சி  தலைமையை மட்டும்  பார்த்து,  ஓட்டு போட்டு ...வெற்றி பெற செய்கிறார்கள். நிக்கிற தலைவர்கள் நல்ல மனுஷங்களா இருக்க வேண்டாமா..??  இது ரேணுகாவின் கேள்வி. 

ரேணுகா... நான் சொல்றதை கேளு. இந்த கமலா அம்மா, அவங்க வீட்டுக்காரர் மாதிரி இல்ல. அவங்க வீட்டுக்காரர் செய்றத தட்டிக் கேட்க முடியாமல், அவங்க மௌனமா இருந்தாங்க . எனக்கு தெரியும் அவங்கள பத்தி.  அவங்க கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க.  பாவம் புண்ணியம் பாக்குறவங்க.  இப்போ   இந்த ஊர்  மக்களுக்கு ஏதாவது செய்தே ஆகணும் என்கிற நினைப்பு அவங்க மனசுல ஆழமா இருக்கு . அவங்க மகன் தான் அப்பா மாதிரி. இது கமலா அம்மாவின் உறவுக்கார பெண்  மகேஸ்வரியின்  பதில்.

பஞ்சாயத்து தேர்தல் நெருங்கி வருகிற நிலையில் ... கமலாம்மா ...  மெல்ல தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தொடங்கினாள்.  

இந்த ஒரு வருட காலத்தில் கமலாவின் மனதிற்குள் ஆயிரம் மாற்றங்கள்... கணவரே போய்விட்டார்.  இனி இந்த காசை வைத்து நான் என்ன செய்ய....?  என்ற கேள்வி அவளை  சதா துளைத்துக் கொண்டே இருந்தது. இனி இப்பணத்தை இந்த ஊர் மக்களுக்காக செலவழிப்பது மட்டுமே எனது குறிக்கோள்... என திடமாக முடிவு செய்து இருந்தாள். 

முதல் முறையாக  அவ்வூர் அரசாங்க பள்ளிக்கூடத்திற்கு ஒரு நூலகம் கட்டுவதற்கும் , கழிப்பிட வசதிக்கும் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தாள்.   புறம் போக்கு நிலத்தில் குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு திடல் அமைத்துக் கொடுத்தாள்.மேலும்  பெண்களை  எல்லாம் ஒன்று திரட்டி அவர்கள் இருக்கும் பகுதி முழுவதும் மரக்கன்றுகளை வாங்கி கொடுத்து ,நட வைத்தார். அவ்வூர் மக்களுக்கு , தற்போது அவள் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் சமீப காலத்தில்  ஏற்பட்டது. 

நகரத்துக்கு இணையா இந்த ஊர்லயும் ரோடு எல்லாம் நல்ல போட்டு கொடுக்கணும். அனைவருக்கும்  குடிக்க நல்ல தண்ணி கொடுக்கணும். நெகிழி குப்பை இல்லாத அழகான  பசுமையான ஊரா மாத்தணும் , நிறைய  மரங்கள் நட வேண்டும்  என்ற பல திட்டங்கள் அவளுக்குள்  இருப்பது , அவ்வூர் மக்களுக்கு அரசல் புரசலாக தெரிய வந்தது.   

இந் நிலையில்  எலக்சன் தேதி அறிவிக்கப்பட்டவுடன் , கமலாம்மா  வாக்கு சேகரிக்க புறப்பட்டாள்.  

கமலாவின் பேத்தி ..."பாட்டி பாட்டி எலக்சன்ல நிக்காதீங்க..தாத்தா மாதிரி உங்களுக்கும் ஏதாவது ஆயிரும். வேண்டாம் நீங்க வீட்டிலேயே இருங்க." புடவையைப் பிடித்துக்  இழுத்து ..... பாட்டியை  தடுத்தாள் பேத்தி. 

கமலாவின் மகன் சீக்கிரம் கிளம்புமா..!!! .அதுக்கு என்ன..?  . பவித்ரா முதல்ல உள்ளே போ.  அதட்டினான்.‌

 12 வயது பவித்ரா போச்சு... போ... எனக் கையை ஆட்டிக்கொண்டே  உள்ளே போனாள்.

அம்மா ... வாமா...என அவசரப்படுத்தினான் ...அடுத்து தலைவராய் வலம் வர போகும் அவளின் 35 வயது மகன்.. 

அம்மா.... பேருக்கு  தானே தலைவி . அதிகாரம் செலுத்தப் போவது நாம்  தானே... என்ற நினைப்பு இவனுக்குள்....!!!

 20 பெண்கள்  புடைசூழ...  கமலாவை நடுவில் நிற்க வைத்து ...மேள தாளத்துடன் ...ஓட்டு கேட்க... பயணம் தொடர்ந்தது. கமலா....  மகனின் நினைப்பு என்ன என அறிந்திருந்தாள்.

இருந்தாலும் , நான் ஜெயித்த பிறகு ,மகன் எனவும்  பார்க்காமல்... அவனை  ஓரங்கட்டி விடுவேன் என  தனக்குள் சொல்லிக் கொண்டாள். இந்த தடவை நான் வெற்றி பெற்றால்.... இந்த  ஊர் மக்களுக்கு, இந்த ஊருக்கு... என்னால் முடிந்த  அனைத்து உதவிகளையும்  செய்து , என் கணவர் செய்த பாவங்களுக்கு ... பிரயாச்சித்தம்  செய்தே தீருவேன் ...!!! என்ற ஒரு  திடமான முடிவோடு... பிரச்சார பயணத்திற்கு  ....காலடி எடுத்து வைத்தாள்...!!!

இனி இந்த ஊர் மக்களுக்கு நல்ல காலம் பிறந்தாச்சு.


  முற்றும்.



                                                                   படைப்பு:  இரா. கலைச்செல்வி 






 





 

 

திங்கள், 9 டிசம்பர், 2024

கவிதை #விவசாயி #

கவிதை :   #விவசாயி #.    

ஆக்கம் :கவிஞர் இரா. கலைச்செல்வி

                      *****

எனை படைத்தவன் இறைவன்... என்றால் ...!!!

எனக்கு உணவு படைப்பவன்  நீயன்றோ,எனக்கு இறைவன்...!!!

உணவின்றி உயிர் வாழ முடியுமா..?உயிர் கொடுப்பவன் நீயே அன்றோ..!!!

உணவளிக்கும் உன் உழைப்பே ... உயர்ந்தது அன்றோ அனைத்திற்கும்..!!!

உன் நாட்டின் விடுதலைக்கு உழைத்தவர் மட்டும், தியாகி அல்ல.!!! 

உலக மக்களின் உணவிற்காக உழைக்கும் நீயும் தியாகி தான்...!!!

உணவிற்காக ஊனினை உருக்கி... உழைக்கும் நீ ..!!! 

உயிரை மய்த்துக் கொள்கிறாய்,

உன் வறுமையால்..!!!


உன்னை சுரண்டி தின்னும்..

.உன் முதலாளி மட்டும்...!!!

உல்லாச உலகில் ... 

உற்சாகமாய்...வாழ்கிறான்...!!!


பணம் ஈட்டி வாழ , யாவர்க்கும் பல்லாயிரம் தொழில் உண்டு.!!! ஆனால்

பசிக்கின்ற வயிற்றுக்கு உணவளிக்க... 

பவித்திரமான உன்  தொழில் மட்டுமே.!!!


நீயோ...!!!  உழைத்து.. உழைத்து...

நீர்த்து கருத்து கிடக்கிறாய்...!!!

நின் உழைப்பினை உறிஞ்சுவோன்...

நின்று ,தின்று, பருத்து, கிடக்கிறான்...!!!


மண்ணிலே போட்ட விதை...

மறுபிறப்பு எடுப்பது போல...!!!

உலகு  உய்ய... உன் மறுபிறப்பு...

உலகிற்கு  காலத்தின் கட்டாயம்..!!!


உன் வாழ்வில் வெற்றி முரசு கொட்டட்டும்.!!

உன் வீட்டில் மகிழ்ச்சி பொங்கட்டும்..!!

உன்  குலம்  செழித்து ஓங்கட்டும்.!!

உன்னை இவ்வுலகம் என்றென்றும் போற்றட்டும்.!!


ஆக்கம் : கவிஞர்  இரா.கலைச் செல்வி











வியாழன், 5 டிசம்பர், 2024

பெருமைக்குரியவர் பெருந்தலைவர்



பெருமைக்குரியவர் பெருந்தலைவர் 

படைப்பு :இரா. கலைச்செல்வி

தென்னாட்டு காந்தி, கர்மவீரர் என போற்றப்படுபவரே...!!!

தமிழ்மக்களுக்காக உழைத்த, உன்னத, உத்தமரே...!!!

தமிழகத்தின் மதியஉணவுத்திட்டம், சீருடைத்திட்டத்தின் மூலவரே...!!!

படிக்காத மேதை நீ. பரணி போற்றும் தலைவன் நீ.

பனைமரக்கம்பம் மூலம், கிராமத்திற்கே மின்சாரம் தந்தவன் நீ...!!!

பத்திரிக்கையாளரின் நண்பன் நீ , ஏழைகளின் நாயகன் நீ ...!!!

பிரதமர் நேருவிற்கே ஆலோசனை சொன்னவன் நீ ...!!!

நீ ஒரு சரித்திர பொக்கிஷம்...!!!

உன் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமன்றோ ...!!!

உனக்கு பாரத ரத்னா விருது மட்டும் போதாது ..!!!

உலகவிருதுகள் அனைத்திற்கும் பெருமை சேர்ப்பவன் நீ....!!!



படைப்பு : இரா. கலைச்செல்வி சென்னை.

தியாகத்தால் விளைந்த சுதந்திரம்.

                          @@@@@


படைப்பு இரா. கலைச்செல்வி


நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க..!!!


அகிம்சைவழியில் போராடி போராடி,

காந்திஜியின் கால்கள் தேய்ந்தன..!!!


புரட்சி கவிதைகள் எழுதி எழுதி ,

பாரதியின் கைகள் தேய்ந்தன..!!!


ஆங்கிலேயரிடம்  அடி உதை வாங்கி வாங்கி ,

கொடிகாத்த குமரனின்  கைகள் மரத்து போயின..!!!


செக்கிழுத்து செக்கிழுத்து சிதம்பரனாரின் இடுப்பு  ஓடிந்து போயின.!!!


நம் வீரர்களை தூக்கிலிட்டு தூக்கிலிட்டு,

ஆங்கிலேயரின் கயிறு தேய்ந்து போயின..!!!


ஜான்சிராணி லெட்சுமிபாயின்

வீரத்திற்கும் ..!!!


வீரமங்கை வேலுநாச்சியாரின்

தைரியத்திற்கும்..!!!


மருது சகோதரர்களின் போர் திறமைக்கும்..!!!


வீரபாண்டிய கட்டபொம்மனின் துணிச்சலுக்கும்..!!!


தீரன் சின்னமலையின் அடங்காத ஆவேசத்திற்கும், நிகர் உண்டோ..!!!


இவர்கள் செய்த தியாகங்கள்,

இழப்புகள் ,கொஞ்சமா நஞ்சமா..???


அனைவரின் தியாகத்தால் விளைந்த சுதந்திரத்தை, என்றும் பேணி காப்போம்..!!!


                    *****


இரா. கலைச்செல்வி,

மேனாள் அரசு உயர் அதிகாரி.

சிறுகதை எழுத்தாளர்.

கவிஞர், சென்னை.


புதன், 4 டிசம்பர், 2024

கவிதை. #உயிரின் சிரிப்பு #


கவிஞர் இரா. கலைச்செல்வி.


*🔥உயிரின் சிரிப்பு🔥*

 
ஒரு நிமிஷங்க..

 நான் உயிர் பேசுகிறேன்..
 ஆம்.... உயிரே தான் .!!!

இன்று எல்லா நாளிதழ்களிலும்....
 உயிரற்ற என் உடலின் புகைப்படம்.... 
முதல் பக்கத்தில்.

 வானொலியில், தொலைக்காட்சியில், என்னைப்பற்றிய செய்தியே ....
*தலைப்புச் செய்தியானது.*

 எல்லோரும்
 என்னைப்பற்றியே... பேசுகிறார்கள். 

மத்திய அமைச்சர் முதல்
 பிரதம மந்திரி வரை...
 எனக்காக இரங்கல் செய்தி... அனுப்பியுள்ளனர் .

நேற்று வரை.....
 சாதாரண
 போராளி நான். 
இன்று... இந்தியா
 முழுவதும் தெரிகிறேன் .


காரணம் ...?..  நேற்று நான் படுகொலை செய்யப்பட்டுள்ளேன்.

 நியாயத்திற்காக போராடி ...போராடி ...
பல சுயநலவாதிகளுக்கு பகையாளியானேன்.

*தொடர்ந்து  எனக்கு
கொலை மிரட்டல்கள்*

 என் உயிருக்கு
 பாதுகாப்பு கேட்டேன்.
 நியாயத்திற்காக போராடிய நான்....
என் உயிருக்கு...!!!
 பாதுகாப்பு கேட்டும்... போராடினேன்.

 நியாயமும் கிடைக்கவில்லை. 
என் உயிருக்கு பாதுகாப்பும்
 கிடைக்கவில்லை.

 இன்று....!!! 
உயிர் போனபின்...
நாடு முழுவதும்,
எனக்காக.,..!!! 
 சாலை மறியல்கள்....
 ஊர்வலங்கள்...
 கொலையை கண்டித்து போராட்டங்கள்.

 பத்திரிகைகள்...
என் பக்க நியாயத்தை...
 வரிந்துகட்டி கொண்டு
 எழுதியுள்ளன. 

அதனால்... என்கோரிக்கைகள்...
 நிறைவேறும் இனி !!!

என் உயிர் போன நிலையில் ...!!!

நியாயம் கேட்டதற்கு
 விலை...??
 🔥என் உயிர் ...🔥


உயிரற்ற உடலால்....
 உடலற்ற உயிரால்....
 இனி என்ன செய்ய முடியும் .....!!!



சிரிக்கிறேன்.


படைப்பு.. 
இரா. கலைச்செல்வி.

வாடி என் வயிற்றுக்குள்ளே

சிறுகதை : #வாடி என் வயிற்றுக்குள்ளே..!! # எழுத்தாளர்: இரா.கலைச்செல்வி                       *****          அன்று வீடே  ஒரே பரபரப்பாய் இருந்த...